இசை கலைஞர்களுக்கு எதிராக எவ்விதமான பத்வாக்களோ, கட்டளைகளோ அல்லது புல்லட் குண்டுகளோ பாய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அறிஞர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மஜித் மஜிதி இயக்கியுள்ள ஈரானியத் திரைப்படமான ‘முகமது: கடவுளின் தூதுவர்’ [Muhammad: The Messenger of God] என்னும் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தது தொடர்பாக இந்திய இஸ்லாமிய அமைப்புகள் மதத் தடை [பத்வா] விதித்தது. இதுதான் தக்க தருணம் என்று வி.எச்.பி., ‘ரஹ்மான் தனது தாய் மதத்திற்கு [இந்துமதம்] திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ரொமீலா தாப்பர், பிரபாத் பட்நாயக், சி.பி.சந்திரசேகர், இர்பான் கபீப், அய்ஜாஸ் அகமது, டி.என்.ஜா, டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா, உத்சா பட்நாயக், பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உட்பட எண்ணற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானியத் திரைப்படமான ‘முகமது: கடவுளின் தூதுவர்’ என்னும் திரைப்படத்திற்கு இசை அமைத்தது தொடர்பாக இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள முடிவிற்கு எங்கள் வரவேற்பினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்திரைப்படத்திற்கான பாடல்களுக்கு இசை அமைத்திட தான் ஏன் தேர்வு செய்தேன் என்பது பற்றி ரஸா அகாடமி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அவர் மிகவும் அர்த்தச் செறிவுடன் பதில் அளித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஆக்கப்பூர்வ இசை அமைப்பைக் கட்டுப்படுத்தும் விதத்தில், ரசா அகாடமி அளித்துள்ள மதத்தடையை [பத்வா] நாம் முழுமையாக நிராகரிக்கிறோம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா மற்றும் உலகின் தலைசிறந்த இசை மேதைகளில் ஒருவராவார். உலகம் முழுதும் அவரது இசை பலராலும் போற்றிப் பாராட்டப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் அவரும் தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்.
மதத்தைச் சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் ஆக்கப்பூர்வ பங்கினை வெளிப்படுத்தும் இசை மேதைகளின் சுதந்திரத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர ரஸா அகாடமி போன்ற அமைப்புகள் முயற்சிக்கும்போது, அது இந்தியாவிற்கு மிகவும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திடும்.
ஏ.ஆர்.ரஹ்மான் நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதாலும், நம்முடைய அரசமைப்புச் சுதந்திரத்தின் சாரத்திற்கு உட்பட்டு, இன்றைய மிகவும் இக்கட்டான காலத்தில் “குழப்பம் மற்றும் வன்முறையின்றி’’ இந்தியா தன் பயணத்தைத் தொடரும் என்று அவர் நம்புவதாலும், நாங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் பக்கத்தில் முழுமையாக நிற்கிறோம்.
உண்மையைப் பேசுபவர்களுக்கு, படத்தை வரைபவர்களுக்கு, அல்லது இசையை உருவாக்குபவர்களுக்கு எதிராக எவ்விதமான பத்வாக்களோ, கட்டளைகளோ அல்லது புல்லட் குண்டுகளோ பாய்வதற்கு அனுமதிக்கக்கூடாது” என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.