நடிகர் நாசருக்கு நேற்று மாலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்டோபர் 18 -ஆம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடக்கிறது. அதில் விஷால் அணி சார்பாக தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார்.
நடிகர் நடிகைகளை சந்தித்து ஆதரவு திரட்டுவது, அணியினருடன் ஆலோசனை நடத்துவது என கடந்த சில நாள்களாக நாசர் பிஸியாக இயங்கி வந்தார்.
நேற்று மாலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்புவார் என நாசரின் மனைவி கமிலா நாசர் தெரிவித்தார்.