ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வரும் 16-ம் தேதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா மனித உரிமைகள் ஆணையர் செயித் அல் ஹுசைன் ஜெனீவாவில் 16-ம் தேதி காலை இந்த அறிக்கை பற்றிய செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என்றும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு மார்ச் மாத அமர்வின்போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியே, இலங்கை மீதான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலப்பகுதிக்குள், மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் ஏற்படுத்தியதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்காகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை கடந்த மார்ச் மாதத்திலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், இம்முறை செப்டெம்பர் அமர்விலேயே வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.